×

போலீசாரை கொல்ல சதி திட்டம் தீட்டிய 10 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் கைது: 500 டெட்டனேட்டர், 90 ஜெலட்டின் பறிமுதல்

திருமலை: தெலங்கானா-சத்தீஸ்கர் மாநில எல்லையில் போலீசாரை கொல்ல சதிதிட்டம் தீட்டிய 10 மாவோயிஸ்டுகளை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 500 டெட்டனேட்டர்கள், 90 ஜெலட்டின் குச்சிகள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.தெலங்கானா-சத்தீஸ்கர் மாநில எல்லையில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக பத்ராத்ரி கொத்தகூடம் எஸ்பி வினீத்துக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் உள்ளூர் போலீசாருடன், சி.ஆர்.பி.எப் மற்றும் தனிப்படை போலீசார் கூட்டாக நேற்று ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.

அப்போது மாநில எல்லையை ஒட்டிய வனப்பகுதியில் சிலர் சந்தேகப்படும் வகையில் ஒரு வாகனத்தில் இருந்து மற்றொரு வாகனத்தில் வெடிபொருட்களை மாற்றிக்கொண்டு இருந்தனர். உடனடியாக போலீசார் அவர்களை சுற்றி வளைத்தனர். அவர்கள் தப்பி ஓட முயன்றபோது போலீசார் விரட்டிச்சென்று அனைவரையும் பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த், கோட்டி, ராஜு, ரமேஷ், ஆரோக்கியா, சத்தீஸ்கர் மாநில எல்லையில் உள்ள கிராமத்தை சேர்ந்த முஸ்கி சுரேஷ், முஸ்கி ரமேஷ், லாலு, சோபு, மகேஷ் ஆகிய 10 பேர் என்பது தெரிய வந்தது.

அவர்களிடமிருந்து வெடிமருந்துகள், 500 டெட்டனேட்டர்கள், 90 ஜெலட்டின் குச்சிகள், 2 பைக்குகள், 1 டிராக்டர், 1 பொலிரோ வாகனம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடாவில் நடந்த குண்டுவெடிப்பில் 10 போலீசார் ெகால்லப்பட்டதை போன்று, மேலும் போலீசாரை கொல்ல திட்டமிட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து 10பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களுடன் யார், யாருக்கு தொடர்புள்ளது என்பது குறித்தும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்ட எஸ்பி வினீத் கூறுகையில், மாவோயிஸ்ட் நடமாட்டம் கிடைத்தவுடன் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து வெடிபொருட்களுடன் 10 மாவோயிஸ்ட் தீவிரவாதிகளை கைது செய்துள்ளனர். இதன்மூலம் அவர்களது சதிதிட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.

The post போலீசாரை கொல்ல சதி திட்டம் தீட்டிய 10 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் கைது: 500 டெட்டனேட்டர், 90 ஜெலட்டின் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Tirumalai ,Maoists ,Telangana-Chatdisgarh ,
× RELATED சத்தீஸ்கரில் 12 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொலை